நகைக்காக தோழியை கடத்தி கொலை செய்த பெண்! குழந்தையை நடுரோட்டில் விட்ட கொடூரம்

 
s s

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே 4 சவரன் தங்க சங்கிலிக்காக தோழியை கடத்தி கொலை செய்து குழந்தையை நெடுஞ்சாலை அருகே இறக்கி விட்டு சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அம்சா (வயது 29), இவர் கடந்த 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி திருவண்ணாமலைக்கு பேருந்து மூலம் வந்துள்ளார். அப்போது பெரியார் சிலையில் இறங்கிய அம்சா அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே கேட் ஓரமாக நடந்து சென்றுள்ளார்.அப்போது கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கொல்லைகொட்டாய் பகுதியை சேர்ந்த திருப்பதி (25)மற்றும் கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா ஆகிய இருவரும் ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆட்டோவில் சென்ற நேத்ரா நடந்து சென்ற அம்சா தனக்கு தெரிந்தவர் என்பதால் ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறியுள்ளார். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் வேங்கிக்கால் உள்ள திருப்பதி வசித்து வந்த வாடகை வீட்டில் அழைத்துச் சென்று அம்சா அணிந்திருந்த 4 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு கழுத்தை நெறித்து இருவரும் சேர்ந்து அம்சாவை கொலை செய்துள்ளனர். 

பின்னர் சடலத்தை ஒரு சாக்கு முட்டையில் கட்டி பள்ளிகொண்டாப்பட்டு அருகே உள்ள கரும்பு தோப்பில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனிடையே அம்சாவின் இரண்டரை வயது குழந்தையை திண்டிவனம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே சாலையில் ஓரமாக விட்டு விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து சாலையில் திரிந்த 2 1/2 வயதை குழந்தையை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் குழந்தையை மீட்டு வைத்துள்ளனர். குழந்தை சாலை ஓரமாக அழுது கொண்டிருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் குழந்தையை மீட்டு குழந்தையின் தந்தை சக்திவேலிடம் ஒப்படைத்துள்ளனர். காணாமல் போன குழந்தை கிடைத்த நிலையில் தாய் அம்சாவை காணவில்லை என சக்திவேல் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் அம்சாவை தீவிரமாக தேடி வந்தனர். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் போலீசார் பல்வேறு கோணங்களில் அம்சாவை தேடி வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு தனியார் பொறியியல் கல்லூரி அருகே இரண்டரை வயது குழந்தையை கொண்டு வந்து விட்டது யார்? என முதலில் போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணையை தொடங்குகின்றனர். 

முதலில் அம்சாதான் குழந்தையை கொண்டு வந்து விடுவது போல் தெரிந்தாலும் மேலும் பல்வேறு சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் அவர் அழைத்துக் கொண்டு வந்து விட்ட இருசக்கர வாகனம் குழந்தையின் அப்பாவும் அம்சாவின் கணவருமான சக்திவேல் பார்த்தபொழுது இந்த வண்டி கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நேத்ராவிற்கு சொந்தமானது என அடையாளம் காட்டியுள்ளார். அதன் அடிப்படையில் கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நேத்ராவை, கீழ்பெண்ணாத்தூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் அவலூர்பேட்டை சாலையிலிருந்து அம்சாவை ஆட்டோவில் மருத்துவமனை அழைத்து செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் தனது கள்ளக்காதலன் கீழ்பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி வசித்து வந்த வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று அம்சா அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை கழட்டிக்கொண்டு அம்சாவை கழுத்து நெறித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் வீசியதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கரும்புத் தோட்டத்தில் சாக்கு முட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

நான்கு சவரன் தங்க நகைக்காக தனது ஊரைச் சேர்ந்த தோழியை கடத்தி கொலை செய்து அவர்களது குழந்தையை நெடுஞ்சாலை ஓரம் தவிக்க விட்டுச் சென்ற கள்ளக்காதல் ஜோடி செய்த இந்த கொடூர கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.