பவானியில் பட்டப்பகலில் அரிவாள்மனையால் பெண் வெட்டிக்கொலை! நகைகள் மாயம்
பவானியில் பட்டப் பகலில் சமையலறையில் வைத்து பெண் அருவாள் மனையால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி, வர்ணபுரம் நான்காவது வீதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (45 ) இவரது மனைவி விஜயா ( 38) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். விஜயாவின் கணவர் இன்று வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு மதியம் உணவுக்காக வீட்டிற்கு வந்து மீண்டும் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதியத்திற்கு மேல் அவரது மனைவி விஜயா சமையலறையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அருகே குடி இருந்தவர்கள் பவானி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விஜயாவை அருவாள்மனையாள் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் விஜயா கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை மாயமாகி இருப்பதாகவும், முதற்கட்ட தகவல் வெளியாகியது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் காவேரி மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்படு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். பவானி நகரின் பிரதான இடமாக உள்ள வர்ணபுரம் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் பட்டப் பகலில் அரங்கேறி உள்ள கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

