“எப்ப பாரு குடி”- எல்லை மீறிய கணவனை அடித்தே கொன்ற மனைவி
திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பெரியார் தெருவில் வசித்து வரும் பாண்டியராஜன் (40). விஜயலட்சுமி (30) தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். திருநகர் பகுதியில் பாண்டியராஜன் பூ மற்றும் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார். பாண்டியராஜன் மற்றும் விஜயலெட்சுமி இடையே அடிகடி சண்டை ஏற்படும். பாண்டியராஜன் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மாலையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த பாண்டியராஜன் வீட்டில் இருந்த மனைவி விஜயலட்சுமியுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பாண்டியராஜன் மனைவியை அடித்து கீழே தள்ளியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற விஜயலட்சுமி கீழே கிடந்த இரும்புகம்பியை எடுத்து பாண்டியராஜனின் பின்னந்தலையில் பலமாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்த பாண்டியராஜன் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக திருநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த திருநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு இறந்த பாண்டியராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


