வழக்கறிஞர் உள்பட இருவர் படுகொலை : ஒரேநாளில் நடந்த இரட்டைக்கொலையால் பரபரப்பு!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
கும்பகோணம் குப்பம்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் காமராஜ். இவர் உடல்நலம் சரியில்லாத தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இவரது இருசக்கர வாகனத்தை மறைத்த மர்ம நபர்கள் காமராஜை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருப்பினும் அவரது தந்தை பார்த்திபன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனிடையே காமராஜின் வீட்டிற்கு சென்ற இந்த மர்ம கும்பல் அவரது நண்பர் சக்திவேலையும் படுகொலை செய்துள்ளது. ஒரே நாளில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்த இரட்டைக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாச்சியார்கோவில் போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
முன்னதாக காமராஜுக்கும் , அவரது உறவினர் ராஜவேலுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக காமராஜ் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.