தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொன்ற கணவன் - பகீர் காரணம்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் கருணாகரன் (43). இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கருங்காலி குப்பம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகள் கலையரசி (33) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் கருணாகரனுக்கு மனைவி கலையரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்தட டிசம்பர் 30-ந்தேதி இரவு மனைவி கலையரசி உணவு அருந்திவிட்டு உறங்க சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலை 7 மணிக்கு மனைவி தூக்கத்திலிருந்து எழுந்திருக்காததால் கருணாகரன், அவரைத் தொட்டுப் பார்த்ததில் உடல் முழுவதும் குளிர்ந்த நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இதுகுறித்து கலையரசியின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவரது பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்படவே பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு சென்று தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலையரசியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கருணாகரனிடம் தீவிர விசாரணை நடத்தியதில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அதனை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் மனைவியை தீர்த்து கட்டுவதற்காக திட்டம் தீட்டி நள்ளிரவில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த போது கலையரசியின் கை மற்றும் கால்களில் ஒயரால் மின்சார ஷாக் வைத்து கொன்று விட்டு காலை உடல் நலக்குறைவால் மனைவி இறந்ததாக கூறி அவரது பெற்றோர்களிடம் நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து பள்ளிகொண்டா போலீசார் கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


