குடும்பம் நடத்த வராத மனைவி மற்றும் அவரது தம்பியை அரிவாளால் வெட்டிய கணவர்

 
murder

பொள்ளாச்சி அடுத்த கோடங்கிபட்டியில் குடும்பம் நடத்த வராத மனைவி மற்றும் அவரது தம்பியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

murder

பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வீரமுத்து. இவரது மனைவி சிவமணி, இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவமணியின் தம்பி கண்ணப்பன் பொள்ளாச்சி அருகே உள்ள கோடங்கிபட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதன் காரணமாக தம்பியை கவனித்துக் கொள்வதற்காக சிவமணி ஒரு மாதத்திற்கு மேலாக கோடங்கிபட்டி கிராமத்திலேயே தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை கோடங்கிபட்டி கிராமத்திற்கு சென்ற வீரமுத்து மனைவி சிவமணியை வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில்  அறிவாளால் மனைவி சிவமணியை வெட்டியுள்ளார்.  தடுக்க வந்த தம்பி கண்ணப்பனையும் சராமரியாக வெட்டி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் தப்பியோட முயன்ற வீரமுத்துவை கைது செய்த ஆழியார் காவல் நிலைய போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மச்சினனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.