பாதை அமைப்பதில் தீராத பகை… தந்தை, மகனை கொன்ற உறவுகள்… 15 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்க்கப்பட்ட கொடுமை
15 ஆண்டுகளுக்கு முன்பு பாதை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி படுகொலை செய்துள்ளார். தற்போது, அதே பிரச்னையால் பெரியப்பா, தம்பியை உறவினர்கள் படுகொலை செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நடு இருங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோனிராஜ். இவரது மகன்கள் ஆரோக்கியசாமி, ரோக்குராஜ். இவர்கள் அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இதனிடையே, பாதை அமைப்பது தொடர்பாக அண்ணன், தம்பிக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் அண்ணன் ஆரோக்கியசாமியை தம்பி ரோக்குராஜ் படுகொலை செய்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரோக்குராஜ் தண்டனையை அனுபவித்து வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் ரோக்குராஜின் மகன் ஜான்டேவிட்டுக்கும், ஆரோக்கியசாமி மகன் ஜேசுராஜிக்கும் இடையே பாதை அமைப்பது தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு வண்டி செல்ல ஜேசுராஜ் பாதை விடாததால் ரோக்குராஜ் பாதையை முள் வெட்டி அடைத்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஜேசுராஜூம், இவரது மகன் பிரின்சும் சேர்ந்து ரோக்குராஜையும், அவரது மகன் ஜான்டேவிட்டையும் படுகொலை செய்தனர். படுகாயம் அடைந்த ஜேசுராஜ், இவரது மகன் பிரான்சிஸ் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சமயபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்த உடல்களை மீட்டு பிரேத பிரசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ஜேசுராஜ், அவரது மகன் பிரான்ஸிசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
15 ஆண்டுகளுக்கு பிறகு நிலத் தகராறில் தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.