பொள்ளாச்சி அருகே விவசாயி வெட்டி கொலை

 
murder

கோவை பொள்ளாச்சி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர். 

murder

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் சித்தாண்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் ( 59 ) விவசாயி.  இவரது மனைவி சரஸ்வதி (48). இவர்கள் இருவருக்கும் தோட்டம் விற்கப்பட்டது குறித்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்நிலையில் நேற்று  இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.  அப்போது அதே பகுதியில் பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் சிவக்குமார்  (36) என்பவர் அங்கு சென்று சண்டையை நிறுத்தி சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.  அப்போது சிவகுமாரை, ராதாகிருஷ்ணன் தாக்க முயன்றுள்ளார். இதனால் இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில்  ஆத்திரமடைந்த சிவகுமார்,  ராதாகிருஷ்ணனை அங்கிருந்த அரிவாளால் சராமரியாக வெட்டியுள்ளார். இதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார்.  

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த ஆனைமலை போலீசார்  ராதாகிருஷ்ணன்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ராதாகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதற்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் அவரது மனைவி சரஸ்வதி உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.