காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்ய முயன்ற மகள்
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பிள்ளையார்புரத்தில் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் சுருதி நாகர்கோவிலில் உள்ள ஒரு கலை கல்லூரியில் (இந்து கல்லூரி) முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் அவருடன் பயிலும் சக மாணவன் அபிலாஷுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .இந்த நிலையில் மாணவி தனது தாய்க்கு தெரியாமல் வீட்டில் இருந்த பத்து பவுண் தங்க நகையை, தனது காதலரான அபிலாஷுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு பிடித்த தாய் கலாவதி மகள் சுருதியிடம் நகையை கேட்டுள்ளார். நகையை கொடுப்பதாக கூறிய நிலையில், சுருதியின் காதலன் அபிலாஷ் கலாவதியை பார்க்க நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் சுருதியும் அபிலாஷும் சேர்ந்து கலாவதியை வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் தாக்கியதோடு துப்பட்டாவால் கலாவதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
இதில் காலாவதி அலறியுள்ளார். இந்த அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய கலாவதியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் காலாவதி கொடுத்த புகாரின் பெயரில் சுசீந்திரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுருதி மற்றும் அபிலாஷை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கல்லூரி படிக்கும் மாணவி தன்னுடன் பயிலும் சக மாணவனான காதலனுடன் சேர்ந்து நகைக்காக தன்னை பெற்ற தாயை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

