வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனம்- கொலையில் முடிந்த பகை

 
கொலை

வளையகாப்பு நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்ட நடனம் கொலையில் முடிந்த சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டு விஷேசத்தில் நடனம் ஆடியதை தட்டிகேட்டதால் நடந்த விபரீதம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). சரக்கு வேன் டிரைவரான இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவில் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு, பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது இறந்த பாஸ்கரன் உறவினர் அஜய் என்பவர் இது சம்பந்தமாக மூன்று பேரை தட்டி கேட்டார். அப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. 

இதன் காரணமாக பாஸ்கரன் தரப்பினருக்கும், சிவகுரு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று அஜய் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் . அப்போது பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 3 பேர் முன் விரோதம் காரணமாக அஜய்யை சரமாரியாக தாக்கினார்கள். இத்தகவல் அறிந்த அஜய் உறவினர்கள் பாஸ்கர், அவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி உள்பட 10 பேர் பூமிநாதன் தந்தை பத்மநாபன் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டனர்.

அப்போது திடீரென்று பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற 10 நபர்களை சுத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் அதிரடியாக தாக்கினார்கள். பின்னர் இரு தரப்பினருக்குள் கடும் மோதலாக மாறியது. இதன் காரணமாக பாஸ்கர் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த நேதாஜி, மகாலட்சுமி, செல்வக்குமார், அஜித் குமார், அஜய் மற்றும் சிவகுரு தரப்பை சேர்ந்த திருமுருகன் ஆகிய 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காயம் அடைந்த அனைவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இத்தகவல் அறிந்த கடலூர் துணை காவல் கண்கானிப்பாளர் பிரபு தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப் - இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதோடு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் பாஸ்கர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமானோர் நவநீதம் நகர் மற்றும் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதற்கிடையில் இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் இறந்த பாஸ்கரன் மனைவி ஜிந்தா ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு, விஷ்ணு, பத்மநாபன், பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 11 பேர் மீது கொலை வழக்கும், திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் முரளி உட்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை வழக்கில் சிவகுரு , அருண்ராஜ் , சுனில் , நக்கீரன் ,விஷ்ணு , பத்மநாபன் ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூரில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.