குடித்துவிட்டு வந்து தினமும் சித்திரவதை ! கணவன் போலீசில் கண்ணீர்!
’’குடித்துவிட்டு வந்து தினமும் சித்திரவதை செய்கிறார். என்னையும், என் பெற்றோரையும் நீங்கதான் காப்பாற்ற வேண்டும்’’- பெண்கள் இப்படி கண்ணீருடன் சொல்வதை வழக்கமாக கேட்டு வந்த, கோக்ரா போலீசார், ஒரு ஆண் இப்படிச்சொன்னதை கேட்டதும் சிரித்தார்கள்.
‘’என் வேதனை உங்களுக்கு சிரிப்பா இருக்கா சார்’’என்று அவர் கேட்டதும், அவர் குரலில் இருந்த வேதனையை உணர்ந்து சீரியஸ் ஆனார்கள் போலீசார்.
என்ன பிரச்சனை என்று அவரிடம் விசாரித்ததில், அகமதாபாத் மணிநகரைச்சேந்த 29 வயதுடைய அப்பெண்ணும் அந்த நபரும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு மனைவிக்கு குடிப்பழக்கம் இருப்பதைக்கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். திருமணம் ஆகிவிட்டதே என்று வெளியே சொல்லாமல் அவருடனேயே வாழ்ந்து வந்திருக்கிறார்.
ஆனாலும், குடிபோதையில் கணவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தினமும் சித்திரவைதை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போயிருக்கிறது. கணவனுக்கு மட்டும் இந்த டார்ச்சர் இல்லை. வயதான மாமனார், மாமியாருக்கும் அப்பெண்ணால் தினமும் சித்திரவதைதான்.
வீட்டுக்குள் இப்படி ரகளையில் ஈடுபட்டு வந்த அப்பெண், கணவனின் அலுவலகத்திற்கும் போதையில் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இத்தனை கொடுமைகளையும் அப்பெண் செய்துவிட்டு, போலீசிலும், மகளிர் அமைப்புகளிலும் கணவனும், மாமனார், மாமியாரும் தன்னை கொடுமைப்படுத்துவதாக வேறு புகார் கொடுத்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.
அப்பெண்ணின் சித்திரவதைகளை இனிமேலும் தாங்கமுடியாது என்றும், தனக்கும் பெற்றோருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும், எங்களுக்கு ஏதேனும் நடந்தால் மனைவிதான் அதற்கு காரணம் என்று கண்ணீருடன் சொல்ல, அப்பெண் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்திருக்கிறார்கள்.