நீட் தேர்வுக்கு தயாரானவர்… திடீர் தோல்வி பயம்… உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி

 

நீட் தேர்வுக்கு தயாரானவர்… திடீர் தோல்வி பயம்… உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி

கடந்தாண்டு நீட் தேர்வில் பெற்றி பெற்ற மாணவிக்கு பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏற்க மறுத்த மாணவி, இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாரானார். திடீரென நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு அமல்படுத்தியது மத்திய அரசு. பிளஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் நீட் தேர்வு குறைந்தால் மாணவ- மாணவிகளின் எதிர்காலம் கேள்வி குறிதான். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முதல் பலியானது அரியலூர் அனிதா. பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்தார் அனிதா. அவர் பற்றி வைத்த தீ இன்று வரை தமிழகத்தில் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நீட் தேர்வால் கிராமப்புற மாணவ- மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்து வருகிறது. இந்த கொரோனா காலத்திலும் நீட் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய் தொற்று காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வை வரும் செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்படும் என்ற தேர்வு முகமை அமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில்,”மாணவர்கள் நீட் தேர்வை கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் அனைத்து தேர்வு மையங்களிலும் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி உட்பட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படும். அதுதொடர்பான அனைத்து பணிகளையும் அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை மேற்கொண்டு வருகிறது’’ என வாதிட்டார்.

இதையடுத்து, தேர்வு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு செய்வது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கண்டிப்பாக பாதிக்கும் என்பதால், நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயத்தில் மாணவர்கள் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்று பல் மருத்துவம் படிக்க கிடைத்த வாய்ப்பை மாணவி ஏற்கவில்லை. இந்தநிலையில் நீட் தேவில் இந்த முறையும் மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்று சுபஸ்ரீ மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், மாணவி சுபஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.