பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையின் கை, கழுத்தில் வெட்டு

 
வெறிச்செயல்

மது போதையில் தனியார் பள்ளிக்குள் புகுந்து பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை பிளேடால் கிழித்த கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் விக்டரி நர்சரி அண்ட் பிரைமரி ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் T. கள்ளிப்பட்டியை சேர்ந்த பிரியங்கா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.ஆசிரியர் பிரியங்காவுக்கும், அவரது கணவரான ரமேஷுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மது போதையில் இருந்த ரமேஷ், தனது மனைவி பிரியங்கா பணிபுரியும் தனியார் பள்ளிக்குள் நுழைந்து  அவர், வைத்திருந்த பிளேடால் மனைவி பிரியங்காவை கழுத்து பின்பகுதி மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கிழித்துள்ளார். அப்போது அங்கே இருந்த சக பெண் ஆசிரியர் தடுக்க முற்பட்டபோது அவரையும் பிளேடால் கையில் கிழித்துள்ளார்.

இதனைப் பார்த்த பள்ளி குழந்தைகள் அலறி அடித்து பள்ளி வகுப்பறைக்குள் அங்குமிங்கும் ஓடி கூச்சலிட்டுள்ளனர். இதனைத்  தொடர்ந்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, மது போதையில் பள்ளிக்குள் நுழைந்து பள்ளி குழந்தைகள் முன்பு மனைவியையும் சக ஆசிரியரையும் பிளேடால் கிழித்த இளைஞரை கைது செய்து பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த பிரியங்கா மற்றும் சக ஆசிரியர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ரமேஷ் நேற்று மாலை அவர் மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று பிரியங்காவின் தாயை தாக்க முற்பட்டபோது தடுக்க வந்த நபரையும் தாக்கியதாகவும் அது குறித்து தென்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.