தாபாவில் வேலைக்கு சேர்ந்து 15 நாட்களில் இளைஞர் செய்த கொடூர செயல்... பரபரக்கும் விசாரணை

 
ச் ச்

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் சூலூர்பேட்டை தாபாவில் ஆந்திரா போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி முடிந்து சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமியை, வாயை பொத்தி இளைஞர் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து குற்றவாளியை தேடி வந்த போலீஸார், அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர், மேலும் குற்றவாளியை அடையாளம் கண்டு தகவல் சொல்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பரிசு அறிவித்து தொலைபேசி எண்ணையும் வெளியிட்டிருந்தது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மின்சார ரயிலில் செல்வது போன்ற புகைப்படம் வெளியானது. இதனையடுத்து 13 நாட்களுக்கு பின் குற்றவாளியான மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர்தான் தன்னை வன்கொடுமை செய்தவர் என சிறுமியும் உறுதிப்படுத்தியுள்ளார். தான் தான் சிறுமியை வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞர் போலீசிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார்

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த இளைஞர் வேலை பார்த்த சூலூர்பேட்டையில் உள்ள ஹரியானா ராஜஸ்தான் தாபாவில் ஆந்திர மாநில போலீசார் நேரில் சென்று விசாரணை செய்தனர். கைதான இளைஞரின் புகைப்படத்தை காட்டி போலீசார் விசாரித்துவருகின்றனர். அந்த இளைஞர் 15 நாட்களுக்கு முன்னர் தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். தாபாவில் கைதான நபரின் ஆடைகள், ஆதார் அட்டைகள் உள்ளிட்ட தடயங்கள் கைப்பற்றப்பட்டன.