ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்களால் பெண்ணுக்கு நடந்த கொடுமை
ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அரியானா மாநிலத்தில் பரிதாபாத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இந்த பெண் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ரயில்வே துறையில் பணிபுரியும் சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் இருந்திருக்கிறது. அவர் அந்த பெண்ணுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்து இருந்திருக்கிறார் . இதனால் சதீஷ்குமாருடன் அடிக்கடி பேசி வந்திருக்கிறார் அந்தப்பெண்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது மகனின் பிறந்த நாளுக்கு வருமாறு அந்த பெண்ணை அழைத்து இருக்கிறார் சதீஷ்குமார். 12 மணிக்கு கேக் வெட்டுவதாக சொல்லி இருக்கிறார். வேலை வாங்கத்தரப்போகும் நபர் என்பதால் அவர் அழைப்புக்கு மறுப்பு சொல்ல முடியாமல் அந்தப்பெண் சம்மதித்திருக்கிறார்.
அதற்காக கீர்த்தி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரவு 10.30 மணி அளவில் சதீஷ்குமாரை சந்தித்திருக்கிறார் அந்த பெண். அங்கிருந்து அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு டெல்லி ரயில் நிலையத்திற்கு சென்று இருக்கிறார் சதீஷ்குமார். ரயில் நிலையத்தில் எட்டாவது, ஒன்பதாவது பிளாட்பாரத்தின் ஓரத்தில் இருக்கும் குடிசைக்குள் அழைத்திருக்கிறார் சதீஷ்குமார்.
குடிசைக்குள் செல்ல அந்த பெண் தயங்கி நின்றிருக்கிறார். தயங்கி நின்ற அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக குடிசைக்குள் இழுத்துச் சென்று இருக்கிறார். அங்கு சதீஷ்குமாரின் நண்பர்கள் மூன்று பேர் ஏற்கனவே காத்திருந்திருக்கிறார்கள். இதைக் கண்டு பதறி இருக்கிறார். அப்போது நான்கு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
அதிகாலை 3 மணிக்கு மேல் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த அந்த பெண் தன்னை நாலுபேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த நாலு பேரும் ரயில்வே துறையில் மின்துறையில் பணிபுரிந்து வருபவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் சதீஷ்குமார் ,ஜெகதீசன், மங்கள் சன் ,வினோத்குமார் என்பது தெரியவந்திருக்கிறது. அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றர்.
ரயில்வே ஊழியர்களால் ரயில் நிலையத்தில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரியானா மற்றும் டெல்லி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.