டிவி வால்யூமை அதிகரித்துவிட்டு சுத்தியால் ஓங்கி அடித்து மனைவின் தலையை இரண்டாக பிளந்த கணவன்

அலறல் சத்தம் வெளியே கேட்காத வகையில் டிவி வால்யூமை அதிகரித்துவிட்டு சுத்தியால் ஓங்கி அடித்து மனைவின் தலையை இரண்டாக பிளந்திருக்கிறார் கொடூர கணவன். நடத்தையில் எழுந்த சந்தேகத்தால் இந்த கொடூரக்கொலை நடந்திருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரிமலை பாடி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 34 வயது கூலித் தொழிலாளி விஜி. இவரது மனைவி செல்வி (வயது30). திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன தம்பதிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளார்கள். மகள் பத்தாம் வகுப்பும், மகன் ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். விஜிக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருந்ததால் அந்த நிலத்தை தன் மனைவிடம் கொடுத்து பாதுகாக்க சொல்லிவிட்டு திருப்பூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார் விஜி.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலை முடிந்து வீட்டிற்கு வந்து இருக்கிறார் விஜி. அப்போது மனைவி நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மனைவி மீது சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வாக்குவாதம் தடித்து கைகலப்பில் முடிந்திருக்கிறது. அத்தோடு சமாதானமாகி இருக்கிறார்கள். அதன் பின்னர் மீண்டும் நேற்று இரவு மனைவியின் மீது சந்தேகம் கொண்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்கள் விஜி.
அப்போது மனைவியைக் கொன்று விட வேண்டும் என்று ஆத்திரம் வந்திருக்கிறது விஜிக்கு. உடனே வீட்டில் இருந்த மகளையும் மகனையும் ஊரில் நடந்து கொண்டிருந்த கோவில் திருவிழாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். பின்னர் வீட்டின் கதவை மூடி இருக்கிறார். இது எதுவும் தெரியாமல் வீட்டிற்குள் இருந்திருக்கிறார் செல்வி. மனைவியை கொல்லும் போது அலறல் சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக டிவியின் வால்யூமை மிக அதிகமாக வைத்திருக்கிறார்.
பின்னர் மனைவியிடம் மீண்டும் வாக்குவாதம் செய்ய பதிலுக்கு செல்வி வாக்குவாதம் செய்த போது, வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து செல்வியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் செல்வியின் தலை இரண்டாக பிளந்து உயிரிழந்து கீழே விழுந்து இருக்கிறார்.
உடனே, செங்கம் காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார் விஜி. நள்ளிரவு இரண்டு மணிக்கு காவல் நிலையத்தில் சென்ற விஜி மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டேன் என்று சொல்லி சரணடைந்திருக்கிறார் . உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதற்குள் தகவல் அறிந்து ஓடி வந்த கதறி துடித்த செல்வியின் தந்தை தன் மகளை கொடூரமாக கொலை செய்த மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்க, மேல் செங்கம் போலீசில் வழக்கு பதிவு செய்து விஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.