கனவில் கண்டதை நிஜமாக்கிய கொடூர தாய்! 12 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை
கனவில் வந்ததை நிஜமாக்கி இருக்கிறார் அந்த கொடூரத் தாய். மகனுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும் என்றால் மகளை கொல்ல வேண்டும் என்று கனவு வந்தது. அதனால் மகளை கொன்றேன் என்று போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஆனாலும் தன்னையும் தாய் கொல்ல வந்தார் தப்பித்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார் மகன். முன்னதாக கணவனை கொலை செய்ய முயன்றிருக்கிறார். அதிலிருந்து அவர் தப்பி இருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. மொத்தத்தில் அந்த பெண்ணுக்கு மனநலம் சரியில்லை என்பதும் போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அப்பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அந்தா டவுன் சிவில் காலணியில் வசித்து வந்த பெண் ரேகா. இவரின் கணவர் ஹடா ஆட்டோ டிரைவராக உள்ளார். இத்தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் இருந்தனர்.
இந்த நிலையில் 12 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அச்சிறுமியின் சகோதரர் போலீசுக்கு தகவல் சொல்ல, போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அச்சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் அச்சிறுமியின் தாய் ரேகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தன் மகனுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்றால் மகளை கொலை செய்ய வேண்டும் என்று கனவு வந்தது. அதனால்தான் மகளை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஆனால் ரேகாவின் மகனோ, சம்பவத்தன்று தாய் என்னையும் சகோதரியையும் கொலை செய்ய முயன்றார். நான் தப்பியோடி அக்கம் பக்கத்தினரிடம் நடந்ததை சொன்னேன். அதற்குள் சகோதரியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார். அதன் பின்னர் தான் போலீசில் புகார் அளித்தேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதன் பின்னர் மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், இதற்கு முன்பு தனது கணவரையும் ரேகா கொலை செய்ய முயன்றிருக்கிறார் என்றும், அதிலிருந்து கணவர் தப்பித்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. அதன் பின்னர் தான் ரேகாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து ரேகாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி உள்ளனர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு உள்ளார் நீதிபதி.