பயங்கரம்! துடிதுடித்த இளம்பெண்! ஏழு ஆண்டுகள் துரத்தியும் காதலிக்காததால் ஆசிட் வீசிய இளைஞர்!
ஏழு ஆண்டுகள் பின் தொடர்ந்து துரத்தியும் காதலித்ததால் இளம்பெண் மீது ஆசிட் வீசி இருக்கிறார் இளைஞர். ஒருதலை காதலால் நிகழ்ந்த இந்த கொடூரம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூருவில் ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார் அந்த 25 வயது இளம்பெண். இவர் காமாட்சி பாளையம் பகுதியில் இருக்கும் சுங்கதகட்டேயில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த இளம் பெண்ணை 7 ஆண்டுகளாக நாகேஷ்(27) என்பவர் பின்தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அந்த இளம்பெண் தொடர்ந்து நாகேஷின் காதலை மறுத்து வந்திருக்கிறார். தொடர்ந்து தன்னைப் பின் தொடர்ந்து வந்ததால் அது குறித்து பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார் அந்த இளம்பெண்.
இதை அடுத்து பெண்ணின் பெற்றோரும், சகோதரரும் நாகேஷை அழைத்து, இனி என் பெண் பின்னால் சுற்ற கூடாது என்று கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அதன் பின்னரும் நாகேஷ் கேட்கவில்லை . தொடர்ந்து தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று இருக்கிறார்.
இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் அந்தப் பெண் வேலைக்குச் சென்றிருக்கிறார். தனது நிறுவனத்தின் முதல் மாடிக்கு சென்ற அவர் எதேச்சையாக பார்த்தபோது, நிறுவனத்தின் முன்பாக நாகேஷ் நின்று கொண்டிருந்திருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் இது மாதிரி வந்து நிற்க வேண்டாம் என்று திட்டி அனுப்புவதற்காக முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கி வந்திருக்கிறார்.
கீழே இறங்கி வந்த அந்தப் பெண் நாகேஷிடம், இனிமேல் இங்கெல்லாம் வரக்கூடாது. என்னை தொந்தரவு செய்யாதே என்று சொல்லிக்கொண்டிருந்த போது, தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து இளம்பெண்ணின் மீது வீசி இருக்கிறார். இதில் முகம், கழுத்து, உடலின் பல இடங்களில் பட்டதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்திருக்கிறார்.
அலறல் சத்தம் கேட்டதும் காவலாளிகள், அங்கிருந்தவர்கள் ஓடி வந்திருக்கிறார்கள். உடனே நாகேஷ் தப்பி ஓடியிருக்கிறார். இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக மடிவாளாவில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்ததும் பெங்களூரு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து காமாட்சி பாளையம் போலீசார் வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இளம்பெண் மீது ஆசிட் ஊற்ற திட்டமிட்டே வந்திருக்கிறார் நாகேஷ். ஆசிட் வீசும் போது தன் கையில் பட்டு விடக்கூடாது என்பதற்காக கை உறை மாட்டிக் கொண்டு வந்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் சொன்ன தகவலை கேட்டு கொண்ட போலீசார் , நாகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் . தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.
ஒருதலைக்காதலால் இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.