மாணவியின் ஆபாச படத்தை பரப்பிய ஆசிரியர் -நின்று போன திருமணம்
மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக ஆசிரியர் வைத்ததால் அம்மாணவியின் திருமணம் நின்று போயிருக்கிறது. இதனால் ஊர் மக்கள் திரண்டு வந்து ஆசிரியரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டம். இம்மாவட்டத்தில் எக்குந்தி கிராமத்தில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் மகேஷ் சிவலிங்கப்பா(வயது44) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் படித்து வந்த மாணவிக்கு மகேஷ் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அந்த மாணவியை தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்திருக்கிறார்.
இந்த நிலையில் அந்த மாணவிக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இதை அறிந்த ஆசிரியர் மகேஷ், அந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும். அந்த மாணவியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார். அதன்படியே அந்த மாணவியின் ஆபாச படத்தை தனது செல்போன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக பதிவிட்டிருக்கிறார்.
இது சக மாணவ , மாணவிகளுக்கு தெரியவந்து, அதன்மூலமாக ஊராருக்கும் தெரியவந்ததை அடுத்து கடைசியாக மணமகன் வீட்டாருக்கும் தகவல் தெரிந்திருக்கிறது. இதை கண்டு திடுக்கிட்டுப் போன அவர்கள் உடனே திருமணத்தை நிறுத்தியிருக்கிறார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் குடும்பத்தினரும் கிராம மக்களும் நேற்று அந்த பள்ளிக்கு திரண்டு சென்றார்கள் . ஆசிரியர் மகேஷை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்திருக்கிறார்கள். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்துள்ளனர் . அவரிடம் மகேசன் ஒப்படைத்துள்ளனர். மகேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள் எக்குந்தி போலீசார்.