தந்தையின் பாலியல் தொல்லையால் விஷம் குடித்த சகோதரிகள் -ஒருவர் உயிரிழப்பு
தந்தையின் பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான சகோதரிகள் விஷம் குடித்துள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்து விட இன்னொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பண்டா பகுதியில் மல்கான் சிங் என்பவர் மனைவி ரேகா தேவி இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது இரண்டு மகள்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் அந்த இரண்டு சகோதரிகளும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் .
பெற்ற தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத சகோதரிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். இதில் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விட இன்னொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த தாயார் ரேகா தேவி கணவர் மல்கான் சிங் மீது புகார் அளித்துள்ளார். இதை அடுத்து பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மல்கான் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மல்கான்சிங் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் பரோலில் வீட்டிற்கு வந்து இருக்கிறார். இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.