திரையரங்குகளில் டான்ஸ் ஆடிய தங்கை! ஆத்திரத்தில் சுட்டுக்கொன்ற அண்ணன்
தனது தங்கை மாடலிங் செய்வது பிடிக்காமல், நடனம் ஆடுவது பிடிக்காமல் சுட்டுக்கொலை செய்திருக்கிறார் அண்ணன். 21 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த இந்த சம்பவம் லாகூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானில் லாகூரில் இருந்து நூற்றி முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ரெனாலா குர்த் ஒகாரா. இப்பகுதியைச் சேர்ந்தவர் சிட்ரா. 21 வயது இளம்பெண் இவர் உள்ளூர் ஆடையின் பிராண்டிற்காக மாடலிங் செய்து வந்திருக்கிறார். தவிர, பைசாலா பாத் நகரில் உள்ள திரையரங்குகளில் நடனமாடும் தொழிலும் செய்து வந்திருக்கிறார்.
மாடலிங், நடனம் எனும் சிட்ரா பார்த்து வந்த இந்த தொழில் அவரது குடும்பத்தினருக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. குடும்ப பாரம்பரியத்திற்கு எதிரான இந்த தொழிலை விட்டுவிடும்படி கேட்டிருக்கிறார்கள். ஆனால், குடும்பத்தினரின் பேச்சைக்கேட்காமல் தொடர்ந்து மாடலிங் செய்து வந்திருக்கிறார். நடனமாடி வந்திருக்கிறார்.
கடந்த வாரம் ரமலான் பண்டிகையை கொண்டாடுவதற்காக பைசலாபாத்தில் இருந்து வீட்டிற்கு வந்திருக்கிறார் சிட்ரா. அப்போது சிட்ராவின் பெற்றோரும், சகோரதர் ஹம்சாவும் இனிமேல் நடனமாட வேண்டாம். மாடலிங் செய்யவேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு சிட்ரா மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதில் கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. எவ்வளவு சொல்லியும் சிட்ரா கேட்காததால் ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து தங்கை சிட்ராவை சுட்டிருக்கிறர் ஹம்சா. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.
போலீசாரின் விசாரணையில், சிட்ரா நடனம் ஆடுவதை செல்போனில் படம் பிடித்து ஒருவர் ஹம்சாவுக்கு அனுப்பியதாகவும், இதனால் அவமானத்தால் சிட்ராவின் சகோதரர் இந்த முடிவு எடுத்ததாகவும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து ஹம்சாவை போலீசார் கைது செய்துள்ளனர்.