5ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் தலைமறைவு
ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் அருகே உள்ளது தென்மருதூர். இப்பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் என்கிற 38 வயது வாலிபர் ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய. பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்திருக்கிறது. இதை எடுத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கார்த்திகேயன், ஆசிரியர் தேவதாசை விசாரணைக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் ஆசிரியர் தேவதாஸ் மீது கூறப்பட்ட புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து ஆசிரியர் தேவதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் இந்த உத்தரவினை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கு நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது தெரிந்ததும் ஆசிரியர் தேவதாஸ் தலைமறைவாகிவிட்டார். போலீசார் வலை வீசி தேடி வருகின்றார்கள்.
பாதிப்புக்கு உள்ளான ஆந்தகுடி தொடக்கப் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.