பாலியல் தொல்லை: ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய மாணவி மருத்துவமனையில் அனுமதி
ஆட்டோ டிரைவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாததால் அவரிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்த மாணவி. டியூசன் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது அந்த சிறுமிக்கு. சிசிடிவி கேமராக்கள் மூலம் அந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து 17 வயது சிறுமி திடீரென்று குதித்துள்ளார். பின்னால் வந்த கார் கொஞ்சம் கவனம் சிதறி இருந்தாலும் அந்த சிறுமி மீது ஏறி இருக்கும். அதிர்ஷ்டவசமாக இதில் அந்த சிறுமி தப்பித்து விடுகிறார்.
சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தூக்கி விசாரித்த போது தான், டியூசன் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது ஆட்டோ டிரைவர் ஆபாசமாக பேசிய தொல்லை கொடுத்து வந்தார். இதனால் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் ஆட்டோவில் இருந்து குதித்து விட்டேன் என்று சொல்லி இருக்கிறார். உடனே அவரை அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அந்த ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ளனர். சையத் அக்பர் ஹமீது என்கிற அந்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார்.
டியூசனுக்கு சென்று வீடு திரும்பிய அந்த மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரா : பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்க ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி.... #Maharashtra #ViralVideo #broken pic.twitter.com/QD3HmuNKQA
— Srilibiriya Kalidass (@srilibi) November 17, 2022