மகன், மகளுக்கு விஷம் கலந்த உணவு! தந்தை தூக்கிட்டு தற்கொலை
மகன், மகளுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து விட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் தந்தை உயிரிழந்துவிட மகளும் உயிரிழந்துவிட சிறுவன் மட்டும் உயிருக்கும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது சிகிச்சை பெற்று வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.
நாக்பூரில் வாதோடா என்கிற பகுதியில் வசித்து வந்தவர் மனோஜ் அசோக் பேலே. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாகவே மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் மனோஜ். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மகன், மகள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்து பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் குழந்தைகளை சந்திப்பதற்காக மதியம் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் மனோஜ். அப்போது அவர்களுடன் காற்றாடி பறக்க விட்டு சந்தோஷமாக விளையாடி இருக்கிறார். பின்னர் இருவருக்கும் விஷம் கலந்த உணவை கொடுத்திருக்கிறார். அது விஷம் கலந்த உணவு என்பதை அறியாத மகனும் மகளும் அந்த உணவை சாப்பிட்டு இருக்கிறார்கள். உணவு சாப்பிட்டதும் குழந்தைகள் இருவரும் மயங்கி விழுந்து இருக்கிறார்கள்.
இதை அடுத்து மனோஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மனைவியின் குடும்பத்தினர் பிள்ளைகளை அழைத்துச் செல்ல மனோஜை தொடர்பு கொண்டு இருக்கிறார்கள் . அது முடியாமல் போகவே மாமனார் அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது தான் மனோஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், குழந்தைக்கு விஷம் கொடுத்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மனைவி மீது உள்ள ஆத்திரத்தினால் இந்த சம்பவம் நிகழ்த்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.