பள்ளி மாணவியின் ஆபாச போட்டோ - ஊழியர் சிறையிலடைப்பு
பள்ளி மாணவியை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து வைத்திருந்த ஊழியரை பள்ளி முதல்வரின் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர் போலீசார்.
சென்னை திருவேற்காட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் அயனம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார் என்கிற எட்வின் எனும் 21 வயது இளைஞர் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்த இளைஞர் தினமும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் பேசி பழகி வந்திருக்கிறார். இதை பார்த்த பள்ளியின் முதல்வர், சந்தேகத்தின் பெயரில் சசிகுமாரின் செல்போனை வாங்கி பார்த்திருக்கிறார்.
சசிகுமாரின் செல்போனில் அந்த மாணவியின் ஆபாச படங்கள் இருந்துள்ளன. இதனால் அதிர்ந்து போன பள்ளி முதல்வர் இதை இப்படியே விட்டால் தனது பள்ளிக்கு தான் பின்னால் பிரச்சினையாகும் என்பதை உணர்ந்து அவர் திருவேற்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் சசிகுமாரை பிடித்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
போலீசாரின் விசாரணையில் அந்த மாணவியை ஆபாசமாக சசிகுமார் தான் படம் பிடித்து செல்போனில் வைத்திருந்தது உறுதியாகி இருக்கிறது. இதை அடுத்து சசிகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.