கடைக்குச் சென்ற சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல்- வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
கடைக்கு சென்ற எட்டு வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்திருக்கிறது திருச்சி மகிளா நீதிமன்றம்.
திருச்சியில் பெற்றோருடன் வசித்து வந்த எட்டு வயது சிறுமி தன் வீட்டு பகுதியில் இருந்த கடைக்கு சென்று இருக்கிறார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், அந்த சிறுமியை ஆசை வார்த்தை சொல்லி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.
வீடு திரும்பிய சிறுமி பெற்றோரிடம் இதை சொல்லி அழுது இருக்கிறது. இதைக் கேட்டு ஆத்திரப்பட்ட பெற்றோர் கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கோட்டை மகளிர் போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்தது ராஜேந்திரன் மீது கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கின் விசாரணைகள் முடிந்ததை அடுத்து நீதிபதி ஸ்ரீ வத்சன் தீர்ப்பளித்துள்ளார். அந்த தீர்ப்பின்படி ராஜேந்திரனுக்கு போக்சோ சட்டத்தின் படி ஐந்து ஆண்டுகளுக்கு கடுங்காவல் சிறை தண்டனையும், சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அருள் செல்விக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த போக்சோ வழக்கில் புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு சரியான தண்டனை பெற்றுத் தந்த கோட்டை மகளிர் காவல் ஆய்வாளருக்கும் காவலர்களுக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார் . மேலும் ஆணையர் கார்த்திகேயன், இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.