தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்! அதிரும் குண்டூர்
கணவரின் கண் முன்னே கர்ப்பிணி மனைவியை மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த போது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் ரெபேல்லா ரயில் நிலையத்தில் இருந்து நாகலயங்கா செல்லும் ரயில் சென்றுவிட்டதால், வீட்டுக்கு செல்வதற்காக ரயிலுக்காக காத்திருந்து இருந்திருக்கிறார்கள் கணவனும் மனைவியும்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான அந்த கர்ப்பிணி கட்டிட தொழிலாளியான தனது கணவருடன் ரயில் கிடைக்காததால் பிளாட்பாரத்தில் உள்ள மேசையில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது குடிபோதையில் வந்த மூன்று பேர் அந்த கர்ப்பிணி பெண்ணின் கணவரை அடித்து தாக்கிவிட்டு கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.
அவர்களை எதிர்க்க முடியாத கணவர் ஓடிச்சென்று ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்க போனபோது, எவ்வளவு தட்டியும் அந்த காவல் நிலையத்தின் கதவுகள் திறக்கவே இல்லை. இதனால் அங்கிருந்து அருகே இருந்த இன்னொரு காவல் நிலையத்திற்கு ஓடியிருக்கிறார். அங்கு சென்று புகார் அளிக்கவும், அவர் சொன்ன தகவலை கேட்டு பதறிப்போன போலீசார், விரைந்து வந்து கர்ப்பிணி மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் குண்டூர் மாவட்டத்தில் நான்கு முறை இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.