வளைகாப்பு நடத்தச்சொன்ன கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவர்
வளைகாப்பு நடத்த வேண்டும் என்று சொன்னதால் கர்ப்பிணி மனைவியை அடித்து கொலை செய்திருக்கிறார் காதல் கணவர். விருத்தாசலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம். கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் அருகே சின்ன வடவாடி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதராஜ். 20 வயதான இந்த இளைஞர் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார் . விருத்தாசலம் காய்கறி சந்தையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விருத்தாசலம் அடுத்த வீரா ரெட்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சக்தி என்ற பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்திருக்கிறது.
பிளஸ் டூ படித்திருக்கும் சக்தி விருத்தாசலம் பெரியார் நகரில் தனியார் பேக்கரியில் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். அதே பேக்கரியில் அற்புதராஜ் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு இரு விட்டார் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு சென்று காதல் திருமணம் செய்து இருக்கிறார்கள்.
திருமணம் முடிந்ததும் விருத்தாசலம் பெரியார் நகரில் இருக்கும் தனது தாயின் வீட்டில் கணவருடன் வசித்து வந்திருக்கிறார் சக்தி. அவர் ஏழு மாத கர்ப்பிணியாக தற்போது இருந்துள்ளார்.
இந்த நிலையில், வேலைக்குச் சென்று விட்டு மதிய சாப்பாட்டிற்காக அற்புதராஜ் வீட்டிற்கு வந்திருக்கிறார். அதன் பின்னர் மீண்டும் வேலைக்கு சென்று இருக்கிறார் அற்புதராஜ் . அவர் சென்ற பின்னர் வீட்டிற்குள் வந்த சக்தியின் தாயார் தனது மகள் உடல் அசைவு இல்லாத நிலையைப்பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை கண்டு கதறி அழுத்திருக்கிறார்.
அதற்குள் சத்தம் கேட்டு மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கவும் சக்தி உயிரிழந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சக்தியின் கணவர் அற்புதராஜை விரைந்து சென்று போலீசார் கைது செய்கின்றனர். அவரிடம் நடத்திய விசாரணை தனக்கு எதுவும் தெரியாது நாடகம் ஆடியிருக்கிறார்.
போலீசார் போட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில்,7 மாத கர்ப்பிணி ஆனதால் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று தினமும் நச்சரித்ததால், அன்றைக்கும் அது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆவேசமாக அடித்ததில் உயிரிழந்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து விருத்தாசலம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.