அந்தரங்க வீடியோவை வெளியிட்டதாகக் கூறி காதலனை கொலை செய்த காதலி
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் உள்ள நியூ மைக்கோ லேஅவுட் பகுதியில் தனது காதலனை 3 ஆண் நண்பர்கள் உதவியுடன் கொலை செய்த காதலி உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் விகாஷ், உக்ரைனில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மேலும், இவர் தனது உயர் படிப்பிற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வந்தார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமானவர் தான், பிரதீபா இவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர், HSR layout என்ற நிறுவனத்தில் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர்.இவர்களது காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில், பிரதீபா மற்றும் அவரது தாயாரின் அந்தரங்க வீடியோக்களை விகாஷ் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதை தனது நெருங்கிய நண்பருக்கு அனுப்பி வைத்துள்ளார். விகாஷின் மடிக்கணினியை பயன்படுத்திய போது அவரது செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதிபா அவரிடம் சண்டையிட்டுள்ளார். அதற்கு இதில் என்ன பெரிய விஷயம் உள்ளது என விகாஷ் பதில் கூற இருவருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் வலுத்தது.
தொடர்ந்து, தனது காதலனால் ஏமாற்றப்பட்டது குறித்து பிரதீபா தனது சக நண்பர்களான சுஷில், கௌதம், சூர்யா ஆகியோரிடம் தெரிவித்து விகாஷுக்கு பாடம் புகட்ட உதவி கோரியுள்ளார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த நண்பர்கள் கடந்த 10 ஆம் தேதி விகாஷிடம் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி மைக்கோ லேஅவுட் பகுதிக்கு அழைத்தனர். வீட்டில் இது குறித்து விவாதித்த போது இரு தரப்பிடையே வாக்குவாதம் முத்தி பிரதீபா மற்றும் அவரது நண்பர்கள் விகாஸ் முகத்தின் மீது சுமார் அரை மணி நேரம் விடாமல் கடுமையாக தாக்கி உள்ளனர்.இதில், பலத்த காயமடைந்த விகாஷ் மயங்கிய நிலையில் பதறிப்போன பிரதீபா அவரை சென்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மர்ம நபர்கள் யாரோ அவரைத் தாக்கி விட்டு சென்று இருக்கலாம் என பிரதீபா காவல்துறை அதிகாரிகளிடமும் விகாஷ் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்த நிலையில் பிரதீபா மீது இருந்த நம்பிக்கையில் அவர் மீது சந்தேகப்படாமல் இருந்து விட்டனர். தீவிர சிகிச்சையில் இருந்த விகாஷ் மூலை செயல் இழந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விகாஷை தாக்கிய சுஷில், கௌதம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திய போது முழு தகவல் கிடைத்த நிலையில், இதற்கு உடந்தையாக இருந்த பிரதீபாவையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள சூர்யாவை தொடர்ந்து தனிப்படை அமைத்து தமிழ்நாடு கேரளா ஆந்திரா ஆகிய மாவட்டங்களில் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.