நான்கு இளம்பெண்கள் சேர்ந்து ஒரு இளைஞரை கடத்தி பாலியல் வன்கொடுமை
ஒரு இளைஞரிடம் முகவரி கேட்பது போல் பேசிக்கொண்டு அவரை காரில் கடத்தி நான்கு இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பகுதியில் வேலை முடித்துவிட்டு சாலையில் நடந்து சென்று இருக்கிறார் அந்த இளைஞர். அப்போது 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளம்பெண்கள் அந்த இளைஞரிடம் சென்று முகவரி கேட்பது போல் நடித்திருக்கிறார்கள்.
பேச்சு கொடுத்துக் கொண்டே நான்கு பேரும் சேர்ந்து அந்த இளைஞரை காரில் கடத்திச் சென்றிருக்கிறார்கள். அந்த இளைஞருக்கு மயக்க மருந்து கொடுத்து இருக்கிறார்கள். மயக்கத்திலிருந்த போதே அந்த இளைஞரை நான்கு இளம் பெண்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் அது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை . ஆனால் இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞர் ஊடகங்களிடம் பேசியிருக்கிறார்.
நான் வேலை முடித்து வரும்போது ஒரு கார் நின்றது. அந்த காரில் இருந்த நான்கு பெண்களில் ஒருவர் ஒரு பேப்பரில் இருந்த அதை காட்டி இந்த முகவரி எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள். நான் அதை படிக்கும் போது அவர்களில் ஒருவர் என் கண்களில் எதையோ தெளித்தார். அதன் பின்னர் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. கண்களை நான் மீண்டும் திறந்த போது, அந்த இளம் பெண்கள் என்னை ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் அழைத்துச் சென்று போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அறிந்த காவல்துறை, அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருந்தால் முறையாக புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
முறைப்படி போலீசில் சென்று புகார் அளிக்க வேண்டியது தானே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தனது மனைவி புகார் அளிக்க வேண்டாம். பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம். பெரிதுபடுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக கூறியிருக்கிறார்.