நான்கு கேரள சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை! சென்னை பாதிரியாருக்கு 18 ஆண்டுகள் சிறை
நான்கு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சென்னை பாதிரியாருக்கு 18 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது கொல்லம் நீதிமன்றம்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இயங்கி வரும் மதப்பள்ளியில் சென்னையைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் பரேக்குளம்(35) ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த பள்ளியில் படித்து வந்த 16 வயதுக்கு உட்பட்ட நான்கு சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.
இதையடுத்து அவர்கள் சொன்ன புகாரின் பேரில் , போலீஸாரிடம் பெற்றோர் புகார் கொடுத்ததும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். இது தெரிந்ததும் அதில் பாதிரியார் தாமஸ் பரேக்குளம் தலைமறைவாகிவிட்டார்.
தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த பாதிரியார் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு கொல்லம் போக்சோ சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் பாதிரியார் தாமஸ் பரேக்குளம் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. 3 சிறுவர்கள் மீதான வழக்குகளில் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு சிறுவன் வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது . ஆக மொத்தம் 18 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நான்கு சிறுவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.