மாம்பழம் கேட்டு அழுத சிறுமியை கழுத்தை அறுத்துக்கொன்ற சித்தப்பா
மாம்பழம் கேட்டு அழுது தொல்லை கொடுத்ததால் ஐந்து வயது சிறுமியை அடித்து பின்பு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார் சித்தப்பா. அந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஷாமிலி அடுத்த கெடா குரு தான் என்கிற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் கைரு நிஷா. ஐந்து வயது சிறுமியான நிஷாவின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டதால் இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். சிறுமியுடன் அவரது சித்தப்பா உமர் தீன் இருந்திருக்கிறார்.
அப்போது சிறுமியின் சித்தப்பா மாம்பழம் சாப்பிட்டிருக்கிறார். ஐந்து வயது சிறுமி நிஷா, தனக்கும் மாம்பழம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அந்த இளைஞர் தர மறுக்கவே, மீண்டும் மீண்டும் கேட்டு அடம் பிடித்து இருக்கிறார் அந்த சிறுமி. ஆனால் அந்த இளைஞர் அந்த சிறுமிக்கு கொஞ்சம் கூட மாம்பழம் கொடுக்கவில்லை.
இதனால் தனக்கும் மாம்பழம் வேண்டும் கொஞ்சமாவது மாம்பழம் வேண்டும் என்று சொல்லி சிறுமி அழுதிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் வீட்டில் இருந்த தடியால் சிறுமியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். அதில் அந்த சிறுமி மயங்கி விழுந்திருக்கிறார். அப்போதும் ஆத்திரம் தீராத அந்த இளைஞர் சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிறுமியின் கழுத்தை அறுத்திருக்கிறார்.
இதில் வீடு முழுவதும் ரத்தம் பரவி இருக்கிறது. சிறுமி துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். சிறுமியின் சடலத்தை கோணிப்பையில் கட்டி தூக்கி சென்று அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வீசி இருக்கிறார். வீடு முழுவதும் பரவி இருந்த ரத்தத்தை தண்ணீர் ஊற்றி அலசி இருக்கிறார். அதன் பின்னர் எதுவுமே தெரியாதது போல் வீட்டில் உட்கார்ந்து இருந்திருக்கிறார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர் மகளைக் காணவில்லை என்று பல இடங்களில் தேடி பார்த்திருக்கிறார்கள். எங்கு தேடியும் மகளைக் காணவில்லை என்பதால் ஏமாற்றமடைந்த பெற்றோர் போலீசில் சென்று புகார் கொடுத்திருக்கிறார்கள். அப்போது சிறுமியின் உறவினர்கள் அந்தப் பகுதி முழுக்க தேடியிருக்கிறார்கள்.
அப்போது சிறுமியை கொலை செய்த சித்தப்பா உமரும் அவர்களுடன் சேர்ந்து தேடுவது போல் நடித்து இருக்கிறார். போலீசாருக்கு உமர் நடவடிக்கையில் சந்தேகம் வந்திருக்கிறது. அதை புரிந்து கொண்ட உமர் அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார். இதனால் உமர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்திருக்கிறது. சிறுமியை உமர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டுள்ளார்கள்.
அதே போல் போலீசார் வனப்பகுதியில் பகுதி இருந்த உமரை கைது செய்தபோது சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். பின்னர் சிறுமியை கொல்ல பயன்படுத்திய கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்த இளைஞர் காட்டிய அடையாளத்தின்படி சிறுமியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். பின்னர் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து உமரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மாம்பழம் கேட்டு தொல்லை கொடுத்ததால் சொந்த அண்ணன் மகளை ஐந்து வயது சிறுமியை அடித்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞரின் வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.