கொடூர ஆசிரியர் - 14 மாணவர்களில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
கணக்கு பாடத்தில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாத 14 மாணவர்களை கடுமையாக அடித்திருக்கிறார் அந்த ஆசிரியர். இதில் நாலு மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் பத்தரக் மாவட்டம். அம்மாவட்டத்தில் சுனாமுஹின் என்கிற பகுதியில் இயங்கி வரும் அந்த பள்ளிக்கூடத்தில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கல்பதறு. இவர் எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் கணித பாடத்தில் வடிவியல் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு 14 மாணவர்கள் சரியாக பதில் அளிக்காமல் இருந்திருக்கிறார்கள்.
உடனே ஆத்திரம் கொண்ட ஆசிரியர் கல்பதறு, அந்த 14 மாணவர்களையும் கடுமையாக அடித்திருக்கிறார். இதில் நாலு மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகை போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் பள்ளி நிர்வாகத்தினரோ, மாணவர்களை அந்த அளவுக்கு ஆசிரியர் அடிக்கவில்லை என்று சமாளித்திருக்கிறார்கள். ஆனாலும் பெற்றோர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் ஆசிரியர் கல்பதறுவை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது . மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.