வாலிபர் வெறிச்செயல்- இளம்பெண் வாளால் வெட்டிக்கொலை
வீட்டில் இருந்த பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்று வாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி இருக்கிறார் வாலிபர். அவரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் விராஜ் பேட்டை அடுத்த நங்கலா கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்கிற 24 வயது பெண்ணை அதே கிராமத்தைச் சேர்ந்த தம்மையா என்கிற வாலிபர் சம்பவத்தன்று இரவில் வீட்டிற்குச் சென்று தனது பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் ஆர்த்தி வீடு திரும்பவில்லை .
மறுநாள் காலையில் தங்கலா கிராமத்தில் புறநகர் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார் ஆர்த்தி. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு விராஜ் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இளம்பெண் ஆர்த்தி வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது. ஆர்த்தி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் பண்ணை குட்டை அருகே ஒரு ஹெல்மெட், செல்போன், செருப்பு கிடந்திருக்கிறது. விஷப்பாட்டிலும் அங்கே கிடந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் கைப்பற்றிய போலீசார் அந்த கிராமத்தைச் சேர்ந்த தம்மையா என்கிற வாலிபரை தேடி வருகின்றனர்.
காதல் விவகாரத்தினால் தம்மையா கொலை செய்து இருக்கலாம். போலீசில் சிக்காாமல் இருப்பதற்காக விஷத்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் போலீசார். ஆர்த்தியை வாளால் வெட்டி கொலை செய்வதற்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக இருக்கு வாலிபர் தம்மையாவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.