தன் பாலின சேர்க்கைக்கு மறுத்த இளைஞர் பீர் பாட்டிலால் குத்தி கொலை
தன் பாலின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் பீர் பாட்டிலால் மற்றும் கருங்கற்களால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டு உள்ளார். சம்பத்தப்பட்ட இளைஞர் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். 20 வயதான இந்த இளைஞர் கட்டுமானப் பணியில் சித்தாளாக வேலை செய்து வந்திருக்கிறார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள், பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் ராஜ்குமாரை தேடி இருக்கிறார்கள். கடைசியில் ரயில்வே தண்டவாளத்தில் இடது கண், பின்தலையில் பாட்டில், கருங்கற்களால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார்.
மயிலாடுதுறை போலீசார் ராஜகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலையாளிகள் குறித்து சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மயிலாடுதுறை சித்தர் காடு தெற்கு வீதி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கபிலன் , குத்தாலம் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆகியோர்தான் கொடூர கொலை செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த அடுத்து வீட்டில் பதுங்கி இருந்த கபிலனையும், சிறுவனையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சித்தாள் வேலைக்கு சென்று விட்டு வந்த ராஜ்குமாரை கபிலனும் பள்ளி சிறுவனும் தங்களது பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கபிலனும் அந்த சிறுவனும் சேர்ந்து ராஜகுமாருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள். மது போதையில் இருந்தபோது தன்பாலின சேர்க்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்து ராஜ்குமார் ஓடி இருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த கபிலனும் அந்த சிறுவனும் பீர் பாட்டிலால் பின் மண்டையில் அடித்திருக்கிறார்கள். இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த ராஜ்குமாரை, கற்களை எடுத்து கொடூரமாக முகத்திலும் தலையிலும் குத்தி கொலை செய்திருக்கிறார்கள்.
பின்னர் உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டு விபத்து என்பதை போல சொல்லி நாடகமாடெல்லாம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் ராஜ்குமார் ஒல்லியான தேகம் என்பதால், ரயிலில் அடிபடாமல் தண்டவாளத்தில் நடுவே கிடந்திருக்கிறார். இதனால் தான் இது தற்கொலை அல்ல கொலை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.