தாயின் உதவியுடன் 17 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர்
ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்- சாந்தி தம்பதியர். இவர்களின் மகன் ஜெயக்குமார். கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து காதலிக்க வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது அந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். அவரை ஜெயக்குமார் தொடர்ந்து காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும் சிறுமியை கட்டாயப்படுத்தி தனது பைக்கில் கடத்திச் சென்று புதுக்குடி கரைமேடு ஜெயக்குமாருக்கு சொந்தமான முந்திரி காட்டில் தனி வீட்டில் வைத்து கடந்த பத்து நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரது தாயார் சாந்தியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கடந்த 10 நாட்களாக தன் மகளை காணவில்லை என ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் 10 நாட்கள் கழித்து தனது மகள் தானாக வீட்டிற்கு முன்பாக வந்ததாகவும், வேலை ஏதும் செய்யாமல் யாரிடமும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி ஜெயக்குமார் தன்னை பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து கட்டாயப்படுத்தி காதலிக்க வற்புறுத்தியதாகவும், மேலும் தற்பொழுது தன்னை அவரது பைக்கில் அழைத்துச் சென்று முந்திரி காட்டில் உள்ள தனி வீட்டில் வைத்து தன்னை 10 நாட்களாக கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஜெயக்குமார் மற்றும் அவரது தாயார் சாந்தி ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர். விசாரணையில் உண்மையென ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் போலீசார் ஜெயக்குமார் மற்றும் அவரது தாயார் சாந்தி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து சிறுமியை காதலிக்க வற்புறுத்தி கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் ஜெயக்குமாரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த ஜெயக்குமாரின் தாயார் சாந்தியையும் போலீசார் கைது செய்தனர். ஜெயக்குமாரை ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும், அவரது தாய் சாந்தியை திருச்சி காந்தி மார்க்கெட் பெண்கள் தனி சிறைக்கும் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.