ஷேர் ஆட்டோவில் பள்ளி சென்ற மாணவியை திடீரென்று கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற இளைஞர்
பள்ளிக்கு சேர் ஆட்டோவில் சென்ற பத்தாம் வகுப்பு மாணவியை திடீரென்று கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்து இருக்கிறார் இளைஞர். உடன் இருந்த பயணிகள் போட்ட சத்தத்தில் அந்த வாலிபர் தப்பி ஓடி இருக்கிறார். போலீஸ் கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அந்த இளைஞர். சென்னை அடுத்த மீஞ்சூர் பகுதியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.
பொன்னேரி அருகே பெரும்பேடு லிங்க பையன் பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலையில் பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று இருக்கிறார்.
பொன்னேரி அடுத்த கொப்பரை பாளையம் பகுதியைச் சேர்ந்த சோபன்பாபு என்கிற 24 வயது இளைஞர் அந்த ஆட்டோவில் ஏறி இருக்கிறார் . அவர் அந்த மாணவியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார். இதனால் அந்த மாணவி எரிச்சலாக, இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்து சோபன் பாபு திடீரென்று மாணவியின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயற்சித்து இருக்கிறார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பயணிகள் போட்ட சத்தத்தில் இந்த இளைஞர் அங்கு இருந்து தப்பி ஓடி இருக்கிறார். சம்பவம் குறித்து அறிந்த பொன்னேரி போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் சோபன்பாபு விஷகுடித்து தற்கொலைக்கு முயற்சி இருக்கிறார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஆண்டு மாணவியை கடத்தி சென்றதாக சோபன் பாபு மீது பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் ஆட்டோவில் சென்ற மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார் சோபன் பாபு. இதனால் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.