5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை- 5 தோப்புக்கரணம் தண்டனை
ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஐந்து முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி நூதன தண்டனையை வழங்கியிருக்கிறார்கள் கிராமத்தினர்.
பீகார் மாநிலத்தில் நவாடா மாவட்டம். அம்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாக்லேட் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி ஐந்து வயது சிறுமியை ஆசை வார்த்தை சொல்லி கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அந்த வாலிபர். இந்த விவரம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் ஊராரிடம் சொல்ல கிராம பஞ்சாயத்து கூடி இருக்கிறது .
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபரை கிராம பஞ்சாயத்து முன்பாக நிறுத்தி இருக்கிறார்கள். அப்போது அங்கு இருந்த பெரியவர்கள் அந்த நபர் மீதான என்ன குற்றச்சாட்டு என்பதை முழுமையாக கண்டு கொள்ளாமல், தாங்களாக ஒரு முடிவு எடுத்து தீர்ப்பு சொன்னார்கள். அந்த சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்றது தவறு எனச் சொல்லி அந்த நபரை ஐந்து முறை தோப்புக்கரணம் போடுமாறு தீர்ப்பு கூறியிருக்கிறார்கள். அவரும் அப்படியே ஐந்து முறை தோப்புக் கரணம் போட்டு இருக்கிறார்.
சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்றதற்காக ஐந்து முறை தோப்புக்கரணம் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்பதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதை அங்கிருந்தவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து அந்த கிராம நிர்வாகத்தின் பஞ்சாயத்தின் தீர்ப்பு குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதை அடுத்து அம் மாவட்ட போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தை மறைக்க முயன்ற அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.