16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி முகத்தை பிளேடால் கிழித்த வாலிபர்!

 
Abuse

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்த வராததால் பிளேடால் முகத்தை கிழித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பெயிண்டிங் வேலை செய்து வரும் தொழிலாளி மணிகண்டன். இவர் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிறுமி பொள்ளாச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற மணிகண்டன் சிறுமியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சிறுமி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் சிறுமியின் முகத்தை கிழித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து சிறுமியின் உறவினர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து அவர் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.