10 ஆம் வகுப்பு மாணவியை ‘6 நாட்கள் அடைத்து வைத்து’ பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன்!
இவர் அப்பகுதியிலேயே பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருடன் பழகி வந்துள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள அனைகரை என்னும் பகுதியில் வசித்து வரும் 15 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதியிலேயே பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருடன் பழகி வந்துள்ளார். இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்களாம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த மாணவியின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நேரமாகப் பார்த்து அந்த மாணவன் மாணவியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை நம்பி அந்த சிறுமியும் மாணவனின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மாணவியை அழைத்துச் சென்ற மாணவன் அவரது வீட்டிலேயே அடைத்து வைத்துத் தொடர்ந்து ஆறு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனிடையே மாணவியைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில், மாணவனை வலைவீசித் தேடி வந்த போலீசார் அவரது வீட்டிலேயே வைத்து அவரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவன், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.