இளைஞர் மர்ம மரணம்; உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு
பேரையூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருக்கும் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த இளைஞர் ரமேஷ், கடந்த மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது சகோதரர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரமேஷை காவலர்கள் கொலை செய்து விட்டு நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டிய அணைக்கரைப்பட்டி கிராம மக்கள், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து சாப்டூர் உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ரமேஷ் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், இளைஞரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதன் முடிவுகள் வந்தால் தான், ரமேஷ் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரிய வரும்.