’கொரோனா தடுப்பூசி போடுதல்’ தேசிய நிபுணர் குழு ஆலோசனை
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 20 லட்சத்து 49 ஆயிரத்து 452 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 7 நாட்களுக்குள் 20 லட்சம் அதிகரித்து விட்டது.
கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 56,12,027 பேரும், பிரேசில் நாட்டில் 33,63,235 பேரும் இந்தியாவில் 27,01,604 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி மட்டுமே எனும் நிலைமையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது உலகம்.
ரஷ்யா நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி கண்டறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நமது நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நிபுணர்கள் குழு தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் ஓர் ஆலோசனை சந்திப்பை நடத்தியுள்ளது.
இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், புனே; பாரத் பயோடெக், ஹைதராபாத்; ஜைடஸ் கேடிலா, ஆமதாபாத்; ஜென்னோவா பயோ பார்மசூட்டிகல்ஸ், புனே; மற்றும் பயலாஜிக்கல் இ, ஹைதராபாத் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு பரஸ்பரம் பயன்தரக் கூடியதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டுத் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உருவாக்கி வரும் பல்வேறு தடுப்பூசி மருந்துகளின் இப்போதைய நிலை குறித்தும், மத்திய அரசிடம் இருந்து என்ன உதவிகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் தேசிய நிபுணர்கள் குழுவிடம் தகவல்கள் தெரிவிக்கும் வாய்ப்பாக அமைந்ததாகவும் கூறுகிறார்கள்.