அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை – தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ள நிலையில், 833 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 35,339 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே அரசு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கிய நிலையில், அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா பரவி வருகிறது. காவலர்கள், மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களின் மூலமாக அவர்களது குடும்பத்தினருக்கும் பரவும் அபாயம் நிலவுகிறது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவ காப்பீட்டைப் பயன்படுத்தி சிகிச்சை பெறலாம் என்றும் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக முதற்கட்டமாக ரூ.2.5 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.