ஒரே பெயர் கொண்ட இரண்டு கொரோனா நோயாளிகள் : தவறுதலாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஒருவரால் ஆடிபோன மருத்துவமனை நிர்வாகம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த அபாயகரமான வேளையில் பல குற்ற சம்பவங்களும், அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்தவகையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் கடந்த 19ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதே பெயரைக் கொண்ட திருவைகுண்டத்தை சேர்ந்த மற்றுமொருவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா சிகிச்சை பெற அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று கொரோனா குணமடைந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிய போது கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற வந்தவருக்கு பதிலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற வந்த வரை மருத்துவமனை நிர்வாகம் தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து அறிந்த அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசிய பிறகு ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பப்பட்டவர் மீண்டும் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அந்த நபரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் வீட்டில் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த நபர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேராக வீட்டுக்கு செல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்துவிட்டு பிறகு மெதுவாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரை உடனடியாக அழைத்துக் கொண்டு சென்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.