கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை!

 

கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை!

தென்காசி

தென்காசி அருகே கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பைனான்சியரை கைதுசெய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கருவந்தா பகுதியை சேர்ந்தவர் கணேசன் (42). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கணேசன், குடும்ப செலவிற்காக அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் கனகராஜிடம் ரூ.70 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை சரிவர இல்லாததால் கணேசனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை!

இதனால், பைனான்சியர் கனகராஜ், கணேசனின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக, கணேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவி கோபித்துகொண்டு, தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனமுடைந்து காணப்பட்ட கணேசன், நேற்று முன்தினம் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார், கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் கனகராஜை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.