பண்டிகை கால சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை காட்டிலும் கட்டணம் அதிகம்… காங்கிரஸ் குற்றச்சாட்டு
பண்டிகை கால சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை காட்டிலும் 30 சதவீதம் கட்டணம் அதிகமாக இருப்பதாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியன் ரயில்வே நாடு முழுவதும் மொத்தம் 392 சிறப்பு ரயில்களை அறிவித்தது. இந்த சிறப்பு ரயில்களில் பயண கட்டணம் சாதரண ரயில்களை காட்டிலும் 30 சதவீதம் வரை அதிகம் என்று உறுதிப்படுத்தாத தகவல் வெளியானது. இதனையடுத்து சிறப்பு ரயில்களின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சிறப்பு ரயில்களின் கட்டணம் உயர்வு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லாப் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: பண்டிகை காலத்தில் ஏன் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது? வரும் மாதத்தில் தீபாவளி, சாத் போன்ற முக்கிய பண்டிகைகள் உள்ளன. ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். ஆகையால் ரயில்வே சிறப்பு ரயில்களை தொடங்கியிருப்பது நல்ல நடவடிக்கை.
ஆனால் இந்த ரயில்களில் சாதரண ரயில்களை காட்டிலும் கட்டணம் 25 முதல் 30 சதவீதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக படுக்கை வசதி பிரிவுக்கு பயணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை காலத்துக்கான 392 ரயில்கள் இவை. மொத்த உள்நாட்டு உற்பத்தி 23 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது, 2 கோடி சம்பளதாரர்கள் தங்கள் வேலையை இழந்துள்ள நிலையில், தங்களுக்கு அரசு பணம் கொடுக்காதா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். ஆனால் பண்டிகை காலத்தில் அவர்களிடமிருந்து மத்திய அரசு பணத்தை எடுக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை காட்டிலும் கட்டணம் அதிகம் என்ற செய்தி தவறானது என ரயில்வே விளக்கம் கொடுத்துள்ளது.