இவரு எடப்பாடின்னா அப்போ இவரு யாரு ? அதிமுக பதாகையில் நடந்த குழப்பம்!
சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு திமுக – அதிமுக கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் இரு கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் பணியினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவைப் பொறுத்தவரையில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம் ஓபிஎஸ்-க்கு அளிக்கப்படும் மரியாதையும் உரிய முறையில் வழங்கப்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் அதிமுகவின் இரு துருவங்கள் என்றும் அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் வரும் 2021 தேர்தலிலும் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் அக்கட்சியின் அமைச்சர்கள் பேட்டியளித்து வருவது பலரும் அறிந்த ஒன்றுதான்.
அந்தவகையில் சேலம் மாநகரில் கொண்டலாம்பட்டி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில்,’ கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக நிரந்தர முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களை வருக! வருக! என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த பதாகையில் முதல்வர் பழனிசாமி புகைப்படத்திற்கு மாற்றாக துணை முதல்வர் ஓபிஎஸின் புகைப்படம் பளிச்சென்று அச்சடிக்கப்பட்டு இருந்தது.
இதை எதிர் கட்சியினர் பலரும் இணையத்தில் பதிவிட்டு விமர்சித்து வரும் நிலையில், சக்தி இல்லையேல் சிவன் இல்லை ; சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்ற வசனத்தை போல, எடப்பாடியாரும் , ஓபிஎஸும் ஒன்றுதான் என்று அதிமுகவினர் சமாளித்து வருகின்றனர்.