16 வயது சிறுமி கடத்தல்; கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
நாமக்கல்
ராசிபுரம் அருகே 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற புகாரில் கல்லூரி மாணவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி மேற்கு காலனியை சேர்ந்த சேகர் மனைவி போதையம்மாள். இவரது 16 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், இதுகுறித்து போதையம்மாள் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் பாலு (20) என்பவர் சிறுமியை கடத்திச்சென்றதாக சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து பாலுவை தேடிவந்த நிலையில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பாலுவை மடக்கிப்பிடித்து, அவருடன் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமியை கடத்திய பாலு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அத்துடன், மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.