தளர்வுகளற்ற முழு ஊரடங்கு – கோவையில் வெறிச்சோடிய முக்கிய சாலைகள்!
கோவை
கோவை மாவட்டத்தில் இன்று தளர்வுகள் அற்ற முழு ஊடரங்கு கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் 3 ஆயிரத்தை கடந்துள்ள சூழலில், மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறியதாக 2,500-க்கும் மேற்பட்டோர் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், இன்று ஞாயிறு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, கோவை மாநகரில் உள்ள அவிநாசி சாலை, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும் பால், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்பட்டன. நகரில் காலை முதல் மழை பெய்து வந்த நிலையில், மாநகராட்சி சார்பில் முக்கிய சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே சுற்றுவதை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, விதிகளை மீறி வெளியே சுற்றுபவர்களை பிடித்து அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர்.