“தீயநோக்கத்தோடு மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” – முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு!

 

“தீயநோக்கத்தோடு மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” – முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் ஸ்டாலின் செயல்படுவதாக முதலவர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருப்பதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அதிமுக அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் எடுத்துச் சொல்லி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு சென்றிருக்கும் முதல்வர் பழனிசாமி, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

“தீயநோக்கத்தோடு மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” – முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு!

அப்போது பேசிய அவர், ” கிராமசபை மூலம் மக்களை குழப்பி ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருங்கள். நேர்மையான வழியில் மக்களை சந்தித்தால் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தாவது மக்கள் அளிப்பார்கள். அதிமுகவை உடைத்து இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற தீயநோக்கத்தோடு ஸ்டாலின் செயல்படுகிறார். அதிமுக அரசுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்” என்று கூறினார்.

மேலும், “இந்த ஆட்சி மக்களாட்சி, இதை மக்கள்தான் ஆள்கின்றனர். திமுகவின் வாரிசு அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது” என்றும் தெரிவித்தார். கிராம சபைக் கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மு.க ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக முன்வைத்து வரும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்து வருகிறார் என்பது நினைவு கூரத்தக்கது.